மதத்தை அழிப்பது என்று நான் கூறுவதன்
பொருள் என்ன என்பதைச் சிலர் புரிந்துகொள்ளா மலிருக்கலாம்; சிலருக்கு இந்தக்
கருத்து வெறுப் பாயிருக்கலாம்; சிலருக்கு அது புரட்சிகரமாகத் தோன்றலாம்.
எனவே நான் என்னுடைய நிலையை விளக்கி விடுகிறேன். தத்துவங்களுக்கும்
விதிகளுக்கும் இடையே நீங்கள் வேறுபாடு கருதுகிறீர்களா என்று எனக்குத்
தெரியாது. ஆனால் நான் வேறுபாடு கருதுகிறேன். இந்த வேறுபாடு உண்மையானது, மிக
முக்கியமானது என்றும் நான் கூறுகிறேன். விதிகள் யதார்த்தமான
நடைமுறைபற்றியவை; காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு வழக்கமான
வழிகள் அவை. ஆனால் தத்துவங்கள் அறிவு சம்பந்தப்பட்டவை. விஷயங்களை
மதிப்பிட்டு நிர்ணயம் செய்வதற்கு உபயோகமான வழிகள் அவை. விதிகள், ஒரு
காரியத்தை ஒருவர் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும்
என்று கூறுகின்றன. விதிகள், சமையல்
குறிப்புகள் போல, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று
கூறுகின்றன. தத்துவம் என்பது -உதாரணமாக நீதித் தத்துவம் - ஒருவன் தன்னுடைய
ஆசைகளும் நோக்கங்களும் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்
கவனிக்க வேண்டிய அளவை ஆகும். அது, ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது
என்னென்ன அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி
சிந்தனைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு தத்துவங் களுக்கும் விதிகளுக்கும்
இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப் படும்
செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடு கின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை
ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில்
செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால்
அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும்
செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின் பற்றும்
செயல் யந்திரத்தனமானது.
ஒரு மதச் செயல் சரியானதாக
இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடனும் செய்யப்படுவதாகவேனும்
இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட வேண்டுமானால் மதம்,
முக்கியமான தத்துவங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.; அது விதிகள்
மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது. மதம் என்பது வெறும் விதிகள்
மட்டும் சம்பந்தப் பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது.
ஏனென்றால் அது மதச் செயலில் பொறுப்பைக் கொன்று விடுகிறது. பொறுப்புடன்
செய்யப்படுவதுதான் மதச் செயலின் சாரமான பண்பு. இந்து மதம் என்பது என்ன? அது
தத்துவங் களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா? இந்து மதம்,
வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால், யாகம், சமூகம்,
அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம்
கலந்த ஒரு தொகுப்பாகவே இருக்கிறது. மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது
பல்வேறு ஏவல்களும் தடை களும் கொண்ட ஒரு தொகுப்பே. இவற்றில், எல்லா
மக்களுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய
ஆன்மிகத் தத்துவங்கள் என்ற பொருளில் கூறப்படும் மதம் இல்லை. அப்படியே
இருந்தாலும் ஒரு இந்துவின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அம்சமாக அது
காணப்படவில்லை.
ஒரு இந்துவுக்குத் தர்மம் என்பது பல
ஏவல்கட்டளைகளும் தடைக் கட்டளைகளுமே ஆகும். வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும்
இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும், உரைகாரர்கள் அதைப்
புரிந்துகொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது.
வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும்
சடங்குகளையும் குறிப்ப தாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜைமினி தம் முடைய
பூர்வ மீமாம்ஸையில் தர்மம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:
“(வேதத்தில்) கட்டளையாகக் கூறப்படுகின்ற விரும்பத்தக்க குறிக்கோள் அல்லது
பலன்.” எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில்
சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே.
இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க
மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத்
தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சை யானதாக
இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும்
அடிமைத் தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.
லட்சியங்களுக்கு விசுவாச மாக நடப்பதற்குப்
பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது.
எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி
எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது
இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான்
என்று தீர்மானிக்கப்பட்டிருப் பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்க
தரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த
விதித் தொகுப்புகள் உருவாக்கப் பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால்
இவை இறுதியானவை, மாற்றமுடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது.
இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது
மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்த
படியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச்
சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக்
கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும்
என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப்
பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.
இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து
மக்களிடம் அதை மதம் என்று பொய்ப்பெயர் சூட்டியிருக்கும் முக மூடியைக்
கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச்
செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி,
அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச்
செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ ஒழிக்கவேண்டும் என்றோ
அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று
நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது
பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது
மாற்றப்படக்கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப்
போன சட்டம் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம்
செய்வதற்கு அவர்கள் தயாராயிருப் பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம்
என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.
விதிகளின் தொகுப்பாக அமைந்த மதத்தை நான்
கண்டனம் செய்வதனால் மதமே தேவை யில்லை என்று நான் கூறுவதாகக் கருதக் கூடாது.
மாறாக, மதத்தைப் பற்றி பர்க் (க்ஷரசமந) கூறியுள்ள கருத்து எனக்குச்
சம்மதமானதே. அவர் கூறினார்: ‘உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திவாரமா
யிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தான் எல்லா அரசாங்கங்களும் அவற்றின்
அதி காரங்களும் அமைந்துள்ளன.’ எனவே இந்தப் பழங்கால விதிகளாலான மதத்தை
ஒழிக்க வேண்டும். நான் கூறும் போது, அதற்குப் பதிலாகத் தத்துவங் களாலான
மதம் என்று வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட மதம்தான் உண்
மையில் மதம் என்று கூறத் தகுந்தது.
மதம் மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக
நம்புவதால், மதச் சீர்திருத்தத்தில் அவசியமாக இடம் பெற வேண்டிய அம்சங்கள்
என்ன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை வருமாறு: (1) இந்து
மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்க வேண்டும். இது எல்லா
இந்துக்களும் ஏற்கத்தக்கதாக, எல்லா இந்துக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக
இருக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத் தவிர, வேதங்கள், சாஸ்திரங்கள்,
புராணங்கள் முதலாக, புனிதமானவையாகவும் அதிகாரபூர்வமானவை யாகவும்
கருதப்படும் எல்லா இந்து மத நூல்களும் அவ்வாறு கருதப்படக்கூடாது என்று
சட்டம் செய்ய வேண்டும். இவற்றில் கூறப்பட்டுள்ள மதக் கொள்கைகளையோ சமூகக்
கொள்கைகளையோ பிரசாரம் செய்வதை தண்டனைக்குரியதாக்க வேண்டும். (2)
இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்து விடுவது நல்லது, ஆனால் இது
இயலாது என்று தோன்றுவதால், புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த
வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர
அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று,
புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும்
புரோகிதராக இருக்கக்கூடாது. (3) அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர்
நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப் பத்திரம்
பெறாதவர் புரோகிதராகச் செயல்படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும். (4)
புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள்,
வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க
வேண்டும். மேலும் மற்ற எல்லாக் குடி மக்களையும் போல அவரும் நாட்டின் பொது
வான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும். (5) புரோகிதர்களின்
எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில், ஐ.ஸி.எஸ். அதிகாரிகளின் விஷயத்தில்
செய்யப்படுவது போல, அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.
இவையெல்லாம் சிலருக்கு மிகத் தீவிரமான
யோனைகளாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி இதில் புரட்சிகரமானது
ஒன்றும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும்
முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எஞ்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள்
ஆகிய அனைவருமே தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் அதில்
தாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும். அவர்கள் தொழில் நடத்தும்
காலம் முழுவதிலும் அவர்கள் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதுடன்,
தங்களுடைய தொழில் களுக்குரிய விசேஷ நடத்தைக் கோட்பாடுகளுக்கும்
கட்டுப்பட்டு நடக்க வேண்டும். புரோகிதர் தொழில் ஒன்றுதான் தேர்ச்சி
தேவைப்படாத தொழிலாக உள்ளது. இந்து புரோகிதர் தொழிலுக்கு மட்டும் தான்
குறிப்பிட்ட நடத்தைக் கோட்பாடுகள் இல்லை. ஒரு புரோகிதர் அறிவில் சூனியமாக,
உடம்பில் ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோய்கள் பீடித்தவராக, ஒழுக்கத்தில்
அதமனாக இருக்கலாம். என்றாலும், புனிதமான சடங்குகளை நடத்தி வைக்கவும் இந்து
கோவிலின் மூலஸ்தானத்தில் நுழையவும், இந்துக் கடவுளுக்குப் பூஜை நடத்தவும்
அனுமதிக்கப்படுகிறார். இவையெல்லாம் இந்துக் களிடையே
சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் புரோகிதராயிருப்பதற்குப் புரோகித சாதியில்
பிறந் திருந்தால் போதும் என்று இருப்பதுதான். இது முற்றிலும் வெறுக்கத்தக்க
நிலை.
இந்துக்களின் புரோகிதர் வகுப்பு,
சட்டத்துக்கோ ஒழுக்க நெறிக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதுதான் இதற்குக் காரணம்.
தனக்கு எந்தக் கடமைகளும் இருப்பதாகவும் அது ஒப்புக் கொள்வதில்லை. அதற்குத்
தெரிந்ததெல்லாம் உரிமைகளும் தனிச் சலுகைகளும்தான். சாதாரண மக்கள் மீது
கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு நாசக் கும்பலைப் போல் இவர்கள் தோன்றுகிறார்கள்.
புரோகித வகுப்பு, நான் மேலே குறிப்பிட்டது போன்ற சட்டங்கள் மூலம் ஒரு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகுப்பு விஷமங்கள்
செய்யாமலும் மக்களுக்குத் தவறான வழி காட்டா மலும் தடுப்பதற்கு இது உதவும்.
எல்லோரும் புரோகிதராக வர வழி செய்வதன் மூலம் அதில் ஒரு ஜனநாயகத் தன்மை
ஏற்படும். பிராமணியத்தை ஒழிப்பதற்கும், பிராமணியத்தின் மறு அவதாரமான
சாதிமுறையை ஒழிப்பதற்கும் இது துணை செய்யும். இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு
பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற
முடியும். இந்தச் சீர்திருத்தத்தை எந்தத் தரப்பினரும் எதிர்க்கக் கூடாது.
ஆரிய சமாஜிகள் கூட இதை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களே கூறும்
குண-கர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதேயாகும்.
இதை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும்,
உங்கள் மதத்துக்கு நீங்கள் ஒரு புதிய கோட்பாட்டு அடிப்படை கொடுக்க
வேண்டும். இந்த அடிப்படை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்
கைக்கு, சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகத்துக்கு இணக்கமானதாக இருக்க
வேண்டும். இந்த விஷயத்தில் நான் புலமை பெற்றவன் அல்லன். ஆயினும்,
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்கு இணக்கமான மதத்
தத்துவங்களை வெளிநாடுகளி லிருந்து இரவல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும்
உபநிஷதங்களிலிருந்தே இத்தகைய தத்துவங் களை எடுத்துக்கொள்ள முடியும்
என்றும் என்னிடம் கூறப்படுகிறது. நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமா
அல்லது அதை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்குமா, அல்லது அவற்றில்
உள்ள மூலக் கருத்துக்களைப் பெருமளவுக்குச் சுரண்டியும் செதுக்கியும்
செப்பம் செய்ய வேண்டியிருக்குமா என்று நான் கூற முடியாது.
புதிய கோட்பாடு அடிப் படை அமைப்பது
என்றால் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களையே முற்றிலுமாக
மாற்றுவதாகும். வாழ்க்கையில் போற்றும் பண்புகள் முற்றிலும் வேறாக அமையும்.
மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் கொண்டுள்ள மனப்பான்மைகள்
முற்றிலுமாக மாற்றியமைக்கப் படும். அது மத மாற்றமாகும்; இந்த வார்த்தை
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது புதிய வாழ்க்கையாகும் என்று
கூறுவேன். ஆனால் இறந்துபோன ஒரு உடலுக்குள் புதிய உயிர் புக முடியாது. புதிய
உயிர், புதிய உடலில்தான் புக முடியும். புதிய உடல் வந்த அதனுள் புதிய
உயிர் நுழைய வேண்டுமானால் பழைய உடல் மரிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால்,
புதியது உயிர்பெற்று துடிப்புப் பெறத் தொடங்குவதற்கு முன் பழையது மறைந்து
போக வேண்டும். சாஸ் திரங்களின் அதிகாரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்
என்றும், சாஸ்திரங்கள் கூறும் மதத்தை அழிக்க வேண்டும் என்றும் நான்
கூறியதன் பொருள் இதுதான்அம்பேத்கர்
No comments:
Post a Comment